நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Thursday

சுயத்தைத் தொலைத்தவர்கள்




எனது பதிவுகளை அதிகமான உறவுகள் ஓடிவந்து படிக்கிறீர்கள்.
அம்பலத்தார் ஆள் புதிதாக இருந்தாலும் கைலாக்குக் கொடுத்து ஊக்குவிக்கும்விதத்தில் பதில் கருத்துக்களும்
மெல்ல எழுதத் தொடங்கினீர்கள்.
ஆனால் சில துணிச்சலான கருத்துக்களை முன்வைக்கத்தொடங்கியதும்
யாரிந்த அம்பலத்தார்?
நல்லவனோ? இல்லைக் கெட்டவனோ?
பசுத்தோல் போர்த்திய புலியோ?
புலித்தோல் போர்த்திய குள்ள நரியோ?
என்று ஒருவித குழப்பம் சஞ்சலம் பலருக்கும் வந்திருக்கும்.
அம்பலத்தார் எனும் முகமூடிக்குள் யாராயிருக்கம்?
எதற்காக இப்படியான கருத்துக்களை முன்வைக்க முயலுகிறான்.
என்ற சந்தேகம் தோன்றியிருக்கும்
இதுவும் நியாயமான சந்தேகம்தான்.
இப்படியெல்லாம் தோன்றினால் நல்லது
சற்றே சிந்திக்கத் தொடங்விட்டோம்
என்பதுதான் அர்த்தம்.
அதுமட்டுமில்லை அநேகமான நம் தமிழ் உறவுகளும்
கொஞ்சம் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள்.
அதனால் உணர்வுகளின் அடிப்படையிலேயே பெரும்பாலான எதிர்க்கருத்துக்களும்
சட்டென்று வைக்கப்படுவது வழமை.
ஆனால் இங்கு எந்தவிதமான எதிர்கருத்துக்களுமே வைக்கப்படவில்லை
இதுவும்கூட வரவேற்கத்தக்க மாற்றம்
சட்டென்று யாரும் வசைபாடும் வகையில்
எனது கருத்துக்களுக்குப் பதில்களைக் கொட்டித்தீர்க்கவில்லை.

அதனால் உங்களது சிந்தனையிலும் இந்தவிடயங்கள் மேலோட்டமாக,
உணர்வுபபூர்வமான அல்லாது அறிவுபபூர்வமான சிந்தனையைத் தூண்டியிருப்பது புரிகிறது.
ஆனாலும் பதில் கருத்து எழுத ஒருவிதப் பயம்.
ஆமோதிக்கும்விதமான கருத்துக்களை எழுதினால் எங்களது சமுதாயம் தன்னைப்பற்றி என்ன நினைக்கும்?
தமிழர் நலனுக்கு எதிரானவன் என முத்திரை பதிக்கப்பட்டு ஒதுக்குவிடுவார்களோ என்ற பயம் தடுக்கிறது.
எதிரான கருத்துக்களை முன்வைக்கவும் தயக்கம்
னக்குத்தான் விடயம் புரியவில்லை
பிற்போக்கானவன் என நினைப்பார்களோ என்ற நினைப்பு.
இப்படியாக தனது கருத்து எது என்பதை ஆணித்தராகச் சொல்லமுடியாதவர்களாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

எமது சமுதாயம் எங்களை சுயசிந்தனையற்று சுற்றஉள்ளவர்களின் கருத்துக்களையும் விருப்பு வெறுப்புக்களையும் பிரதிபலிப்பவர்களாகவே வளர்த்திருக்கிறது. பிறந்தது முதல் கட்டையில் போவதுவரை சுயத்தைத் தொலைத்தவர்களாக வாழக் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டோம்.

நான் விரும்பும் உடை
நான் விரும்பும் கல்வி
நான் விரும்பும் வாழ்க்கைத்துணை
எனது குறிக்கோள்
என எதிலுமே என்னால் சுயமாக ஆணித்தரமான முடிவெடுக்கமுடியாமல்,
யார் யாரினதோ விருப்பு வெறுப்புகளுக்கும் இசைந்து
எனது சமுதாயம் என்ன நினைக்குமோ என்று பயந்து பயந்து வாழ்வதல்ல
உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை.
இந்தப்பயத்தை தூக்கித் தூரப்போடுங்கோ!
இந்த சமுதாயம் என்ன நினைக்குமோ?
சுற்றிலும் உள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காக
உங்கள் விருப்புகள் எண்ணங்களை மூடி நீங்கள் அணிந்திருக்கும்
முகமூடிகளைக் கிழித்து எறியுங்கோ. பிரகாசமான உலகம் கண்களில் தெரியும்.
சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ
நிறைந்த தேடுதல் சிந்தனையைத் தூண்டும்
சிந்தனை சீரிய கருத்துக்களைத் தரும்.
நான் வைக்கும் இந்தக் கருத்துக்களைக்கூட நீங்கள் ஏற்கவேண்டுமென்றில்லை.
நான் ஏன் இந்தக் கருத்துக்களை முன்வைக்கிறேன்.
இதை முன்வைப்பதால் எனக்கென்ன லாபம்.
இதை ஏற்பதாலோ அன்றி மறுப்பதாலோ
உங்களுக்குள்ள ஆதாயங்கள் அல்லது பாதிப்புக்கள் என்ன?
எனக்குப் பதில் தரவேண்டுமென்பதோ
அல்லது பதில்கருத்து எழுதவேண்டுமோ என்பதல்ல முக்கியம்.
சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.

அம்பலத்தார்

41 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

நீங்க எழுதுங்க.... யாரும் ஒன்னும் சொல்ல மாட்டங்க

SURYAJEEVA said...

முகமூடி போட்டு கொண்டு ஏன் எழுத வேண்டும்? சமூக அக்கறை நிஜமாகவே இருந்தால் முகமூடி தேவை இல்லை என்பது என் எழுத்துக்களின் சாராம்சம்...

அம்பலத்தார் said...

உற்சாகம் தரும் வார்த்தைகளிற்கு நன்றி தமிழ்வாசி

அம்பலத்தார் said...

நம்மில் பலரும் சமுதாயம் என்ன நினைக்குமோ? உறவினர்கள்,சுற்றத்தார் தப்பாக எடுத்துவிடுவார்களோ என்றெல்லாம் எண்ணி தமது சுய விருப்பு வெறுப்புகளிற்கேற்ப நடக்கமுடியாமல் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அத்துடன் பெரும்பாலும் ஒருவர் கூறும் கருத்துக்களை விமர்சனம் செய்யாமல் கருத்துக்கூறுபவரின் சொந்தவாழ்க்கையை அலசுவதுதான் நம்மவர் வழமை . இந்தவிடயங்களைத்தான் நான் கூறவந்தேன். சூரியஜீவா நீங்கள் தப்பாகப் புரிந்துகொண்டீர்கள் போலத்தெரிகிறது.

Yaathoramani.blogspot.com said...

உங்கள் கருத்துச் சரிதான்
ஆயினும் பொது நலத்திற்கு
ஊறு விளைவிக்காது சுய நலம் இருக்கு மாயின்
ஏற்றுக் கொள்ளக் கூடியதே
அதுவே மாறி இருப்பின்
கொஞ்சம் யோசிக்கவேண்டியதே என்பது
என் கருத்து
மனம் திறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

M.R said...

நண்பர் ரமணியின் கருத்தே என்னுடையது

அம்பலத்தார் said...

Ramani,M.R நீங்கள் கூறுவது சரி பொதுநலத்தைப் பாதிக்காத சுய நலம் இருப்பதில் தவறில்லை என்பதுமட்டுமன்றி அப்படி இருந்தாற்தான் சொந்தவாழ்க்கையில் முன்னேறமுடியும். ஆனால் நான் இங்கு கூறவந்தவிடயம் முற்றிலும் வேறானது. பல சந்தர்ப்பங்களில் நாம் எமது அறிவிற்குச் சரியெனப்பட்ட விடயங்களைக்கூட சுற்றியுள்ளவர்கள், சமுதாயம் தவறாக எடைபோட்டுவிடுமோ என்ற பயத்தில் செய்யாமல் விட்டுவிடுகிறோம். இதைத்தான் தவறு என்கிறேன். சரியெனப்பட்டதை செய்யத்தயங்கக்கூடாது என்கிறேன்.

காட்டான் said...

வணக்கம் அம்லத்தார் உங்கள் கருத்துக்கள் அருமையானவை...  நான்கூட முகமூடியோடே எனது கருத்துக்களை கூறுகின்றேன் ஏனெனில் சொந்த அடையாளத்தோடு கூறும்போது என்னால் ஆணித்தரமாக எதிர் கருத்துக்களை வைக்கமுடியாத சந்தர்ப்பம் நம்மவர்களால் ஏற்பட்டது!!!? அண்மையில் துஸியின் பதிவில் ஹோமோ செக்சுவல் பற்றி ஒரு பதிவு போட்டார் பின்னூட்டத்தில்  வந்து கருத்து சொன்னவர்களை பாருங்கள்.. சொந்த பேரில் வந்து பின்னூட்டமிடுபவர்களில் அனேகரின் சங்கடங்களை புரிந்து கொள்ளலாம்..!!? அத்தோடு இலங்கயில் இருந்து பின்னூட்டம் இடும் சக பதிவர்களையும் பாருங்கள் பாதுகாப்பு நிமிர்த்தம் உண்மையாக சொந்த கருத்துக்களை கூறமுடியாது இருக்கிறார்கள் நான்கூட இலங்கைக்கு சென்று வருவதால் எனது சொந்த பெயரை போட்டு என் உறவுகளை சங்கடப்படுத்த விரும்பவில்லை..!  

எங்களை போல் பாதுகாப்பு பிரச்சனைகள் இல்லாதவர்கள் சொந்த பேரில் எழுதலாம்..!!!??

காட்டான் said...

உண்மைதான் அம்பலத்தார் கருத்துக்களுக்கு கருத்தால் பதில் கூறாது அவன் சொந்த பின்னனியை ஆராய்ந்து கொண்டு இருப்பவர்களால்தான் எங்களைப்போன்றோர் ஏதோ ஒரு அடையாளத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள நேரிடுகிறது..!!!

Anonymous said...

You rock...Keep rocking...

Angel said...

""எனது பதிவுகளை ""என்று ஆரம்பித்து ""காலம் வெகுதூரமில்லை.""என்று பதிவு முடியும் வரை ஒவ்வொரு வார்த்தையும் அருமையாக இருந்தது .

அம்பலத்தார் said...

வணக்கம் காட்டான். முகமூடியுடன் வலம்வருவதாக ஒப்புக்கொள்வதற்கும் துணிவு வேண்டும். உங்களிற்கு ஏற்பட்ட அனுபவங்களை என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். துஸியின் பதிவிற்கு link கொடுத்துவிடுங்களேன் படித்துப்பார்க்கலாம்.

அம்பலத்தார் said...

ரெவெரி நாங்கள் எமது சமுதாயத்தின் ஆணிவேரையே ஆட்டவேண்டியுள்ளது. அதற்கான துணிவும் விவேகமும் நம் அனைவருக்கும் ஏற்படவேண்டும்.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் ஐயா.
உங்கள் நலனை விட, உங்கள் பதிவுகள் பற்றிய கருத்துக்களை விட எங்களின் சிந்தனைகள் வளர வேண்டும் எனும் உங்களின் நல் உளப்பாங்கிற்குத் தலை வணங்குகின்றேன்.

சிந்திப்போம், செயற்படுவோம்! வளமான சமுதாயத்தினைக் கட்டியெழுப்புவோம்.

சீனுவாசன்.கு said...

அட!நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
நல்லா பழகுவோம்!

அம்பலத்தார் said...

அஞ்சலின் நாங்கள் கடக்கவேண்டிய தூரம் அதிகம், பாதையோ மோசம். சீரிய சிந்தனைகளுடன் ஒன்றுபட்டால் மட்டுமே எல்லைதாண்டமுடியும். அனைவரும் கைகோர்த்து நடப்போம். சங்கடங்களின்றி சகதிகள் தாண்டுவோம்.

அம்பலத்தார் said...

நிரூபன், எம்மிடையே நல்லதொரு புரிதல் இருக்கிறது, அதுதான் முக்கியம் பெரிய பெரிய வார்த்தைகளாக ஐயா என்றெல்லாம் அழைக்கவேண்டியதில்லை. ஒவ்வொருமனிதனிடமும் பகிர்ந்துகொள்ளப் பல நல்லவிடயங்கள், அனுபவங்கள் இருக்கின்றன. இருப்பதைப் பகிர்வோம். இல்லாத்தை ஒன்றுபட்டுத் தேடுவோம். எங்களாலும் சாதிக்கமுடியும்.

அம்பலத்தார் said...

சீனுவாசன், நிச்சயமாக நன்றாகப் பழகுவோம், பகிர்ந்துகொள்வோம், சேர்ந்தே தேடுவோம் - நல்லதொரு சமுதாயத்தை

அம்பலத்தார் said...

தகவலிற்கு நன்றி காட்டான். கேட்டதும் சிரமம் பார்க்காமல் ஓடிவந்து உதவும் உங்கள் நல்ல பண்பிற்குத் தலைவணங்குகிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.


வாழ்த்துக்கள்!

Muruganandan M.K. said...

"...எமது சமுதாயம் எங்களை சுயசிந்தனையற்று சுற்றஉள்ளவர்களின் கருத்துக்களையும் விருப்பு வெறுப்புக்களையும் பிரதிபலிப்பவர்களாகவே வளர்த்திருக்கிறது. பிறந்தது முதல் கட்டையில் போவதுவரை சுயத்தைத் தொலைத்தவர்களாக வாழக் கற்றுக்கொடுக்கப்பட்டுவிட்டோம்..." என்றீர்கள்.

இதைத்தான் மந்தைப் புத்தி என்பார்கள் போலும். இதை விட்டு வெளிவந்தால்தான் நாம் முன்னேற முடியும்.

துணிச்சலோடு தெளிவான கருத்துக்களை முன் வைத்ததற்குப் பாராட்டுகிறேன்.

அம்பலத்தார் said...

வாழ்த்துக்களிற்கு நன்றி இராஜராஜேஸ்வரி

அம்பலத்தார் said...

நம்பிக்கையூட்டும் பின்னூட்டங்களிற்கு நன்றி டாக்டர்

M.R said...

அம்பலத்தார் said...
Ramani,M.R நீங்கள் கூறுவது சரி பொதுநலத்தைப் பாதிக்காத சுய நலம் இருப்பதில் தவறில்லை என்பதுமட்டுமன்றி அப்படி இருந்தாற்தான் சொந்தவாழ்க்கையில் முன்னேறமுடியும். ஆனால் நான் இங்கு கூறவந்தவிடயம் முற்றிலும் வேறானது. பல சந்தர்ப்பங்களில் நாம் எமது அறிவிற்குச் சரியெனப்பட்ட விடயங்களைக்கூட சுற்றியுள்ளவர்கள், சமுதாயம் தவறாக எடைபோட்டுவிடுமோ என்ற பயத்தில் செய்யாமல் விட்டுவிடுகிறோம். இதைத்தான் தவறு என்கிறேன். சரியெனப்பட்டதை செய்யத்தயங்கக்கூடாது என்கிறேன்.//

சரி நண்பரே ,தங்கள் கருத்தை ஏற்கிறேன் ,பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

இப்படியாக தனது கருத்து எது என்பதை ஆணித்தராகச் சொல்லமுடியாதவர்களாக நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.//

மனசாட்சி படி உண்மையான வரிகள்.....

மாய உலகம் said...
This comment has been removed by the author.
மாய உலகம் said...

நான் விரும்பும் உடை
நான் விரும்பும் கல்வி
நான் விரும்பும் வாழ்க்கைத்துணை
எனது குறிக்கோள்
என எதிலுமே என்னால் சுயமாக ஆணித்தரமான முடிவெடுக்கமுடியாமல்,
யார் யாரினதோ விருப்பு வெறுப்புகளுக்கும் இசைந்து
எனது சமுதாயம் என்ன நினைக்குமோ என்று பயந்து பயந்து வாழ்வதல்ல
உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை.//

பிறருக்காக வாழுதல் என்பது இப்படி தப்பா புரிஞ்சிக்கிட்டமோ... ஹா ஹா உண்மை தான் அர்த்தமற்றவர்களுக்காக பயந்து பயந்து நமது வாழ்க்கையையே தொலைத்துக்கொண்டிருக்கிறோம்.

மாய உலகம் said...

சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.
//

சிந்தித்து செயல்படுவோம்.. அருமையான சிந்தனை தூண்டும் பகிர்வுக்கு நன்றி சகோ! வாழ்த்துக்கள்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.அம்பலத்தார்,
//...சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ.
நிறைந்த தேடுதல் சிந்தனையைத் தூண்டும்.
சிந்தனை சீரிய கருத்துக்களைத் தரும்.
சுயசிந்தனையில் தோன்றும் சரியான கருத்துக்களுக்கு வடிவம் கொடுங்கோ...//--இதுபோன்ற பல அருமையான கருத்துக்களை உள்ளடக்கிய பதிவு ஒன்றை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

ம.தி.சுதா said...

அம்பலத்தார் ஐயா...

என்ன ஐயா பேரிலயே அம்பலம் என்று வச்சிட்டு தயக்கம்... எங்க அப்ப பேரும் அம்பலம் என்று தான் முடியுது... ஊர முழுக்க வாயை கொடுத்து வம்பிழுக்கிறது தான் வேலை அவருக்கு.. ஹ.ஹ...

குறையொன்றுமில்லை. said...

சிந்தியுங்கோ! செயல்படுங்கோ!
ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயற்படும் காலம் வெகுதூரமில்லை.


சரியாதானே சொல்லி இருக்கீங்க.

நிலாமதி said...

துணிச்சலோடு தெளிவான கருத்துக்களை முன் வைத்ததற்குப் பாராட்டுகிறேன்.

அம்பலத்தார் said...

M.R, ஒரு கருத்தை தவறென மாற்றுக்கருத்துவைக்க ஒரு துணிவுவேண்டும். அதுபோல சரியென புரிந்துகொண்டால் அதை ஒப்புக்கொள்ள ஒரு மனப்பக்குவம் வேண்டும். இவை இரண்டுமே உள்ள நீங்கள் உண்மையிலேயெ ஒரு சிறந்த மனிதன்.

அம்பலத்தார் said...

மாயா உலகம் ராஜேஸ்,
நகைச்சுவை உணர்வுடன்கூடிய உங்கள் நேர்த்தியான கருத்துக்களிற்கு நன்றிகள்.

அம்பலத்தார் said...

முஹம்மத் ஆஷிக்,
முதல் வருகை தந்த உங்களை வாழ்த்தி வரவேற்பதுடன் கருத்துப்பகிர்விற்கும் நன்றி.

அம்பலத்தார் said...

மதி நான் சரியென நினைக்கும் கருத்தை சொல்வதில் என்றுமே எனக்கு தயக்கம் கிடையாது.
அம்பலத்திதில் இருப்பதென முடிவெடுத்தால் தயக்கத்தை மூட்டைகட்டி தூரப்போட்டுவிடவேண்டும்.
ஓகோ! உங்கள் தந்தையாரும் ஒரு சுவாரசியமானவர்போலத் தெரிகிறது. அவருடன் பழகும் சந்தர்ப்பம் கிடைக்காதது கவலைதருகிறது. தந்தையார் ஆரோக்கியமாக உள்ளாரா?

அம்பலத்தார் said...

லட்சுமி அம்மா உங்களைப்பொன்ற பெரியவர்களும் எனது கருத்தை ஏற்றுக்கொள்வது மகிழ்ச்சிதருகிறது.

அம்பலத்தார் said...

பாராட்டுக்களிற்கு நன்றிகள் நிலாம்மா. என்ன நீண்டநாட்களாக புதிய பதிவுகள் எதுவும் இடவில்லை. அதிக வேலையோ?

அம்பலத்தார் said...

வணக்கம் நண்பர்களே!

நான் எப்பொழுதும் எனது மனதிற்கு சரியெனப்பட்ட கருத்துக்களை முன்வைக்கிறேன். பலரும் படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறீர்கள் மேலும் பலர் படித்துவிட்டு மௌனமாக செல்கிறீர்கள்.இதில் பலரும் வாசகர்களாக இருக்கமட்டும் விரும்புபவர்களாக இருக்கலாம். ஆனால் ஒருசிலர் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களாகவும் இருக்கலாம். எனது கருத்துடன் ஒத்துப் போகமுடியாதவர்கள் வெறுமனே ஊமையான வாசகர்களாக இருக்கவேண்டியதில்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்கள் தயவுசெய்து உங்கள் கருத்துக்களையும் தயக்கமின்றி சொல்லுங்கோ. கருத்து பரிமாற்றங்கள்தான் சீரிய சிந்தனை மாற்றங்களை உண்டுபண்ணும்..

மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திக்கும்வரை.....

நேசமுடன் அம்பலத்தார்

J.P Josephine Baba said...

மற்றவர்கள் கருத்தை அறியும் உங்கள் ஆவலை பாராட்டுகின்றேன்.இது பொதுவாக பல தமிழர்களுக்கு இல்லாத தேவையான பண்பு!

Anonymous said...

சுயத்தை தொலைப்பவர்கள் யார்?

சுயத்தை தொலைப்பவர்கள் யார்?
வீட்டில், சமுதாயத்தில், வேலையில், நாட்டில் என்று அனுசரித்து நடபவர்களை எந்த விதத்தில் சுயம் தொலைப்பதாக எடுக்கமுடியும்?, இப்போதெல்லாம் வேலைக்கு விளம்பரம் கொடுக்கும் போதே (working in a team) கேட்கிறார்கள். தவிர இந்திய இலங்கை குடும்ப உறவுகள், சரியாமல் நிலைத்து நிற்பதற்கு சுயமாக இருப்பதும் தடையாகி விடாதா? இதற்காக உங்கள் கருத்து தவறு சொல்ல முற்படவில்லை, தேவையான இடத்தில் நடுநிலமையாக (balanced life)இருக்கவேண்டும்.