நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Monday

காலம் செய்த கோலம்.



அமைதியாப் போய்க்கொண்டிருந்த காலத்திலை ஒரு புயல். ஜே.வி.பி. இன் அரசுக்கெதிரான புரட்சி. இதன் அரங்கேற்றகாலத்தில் கலகெதற எனும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் கிராமத்தில் மாட்டிக்கொண்டன்.
 
ஊரடங்குச்சட்டம் போக்குவரத்துச் சீரின்மை போன்றவற்றாலை கொழும்பு திரும்பமுடியாமல் சிலவாரங்கள் அங்கு தங்கியிருந்தன்.
அப்ப அடிக்கடி ஆமிக்காரன், சேகுவராக்காரங்களை இராணுவ வாகனங்களுக்குப் பின்னாலை கயிற்றிலை கட்டி இழுத்துக்கொண்டு போறாங்களாம், வாகனத்திலை கன பெடியளைக் குற்றுயிராக அள்ளிப்போட்டுக்கொண்டு அவங்களுக்கு மேல ஏறி நின்றுகொண்டு போறாங்களாம் என்று சொல்லி புதினம் பார்க்க ஊர்ச்சனங்கள் பிரதான வீதிக்கு ஓடும் நானும் பலதடவை புதினம் பாக்க ஓடினனான்தான், ஆனால் ஒரு சிறு சந்திலை இருந்த நான் தங்கியிருந்த வீட்டிலையிருந்து பிரதான வீதிக்குப் போறதுக்கு இடையிலை வாகனம் மறைந்திருக்கும். முன்னுக்கு ஓடினவை பிந்தி வந்தவங்களுக்கு கதைகதையாச் சொல்லுவினம், சுற்றி நின்று கொஞ்சப்பேர் தாம் இந்தக் காட்சியளை தவறவிட்டிட்டமே என்று சோகமாக் கதை கேப்பினம். கடைசிவரையிலை எனக்கு அவை சொல்லுறது மெய்யோ பொய்யோ என்ற சந்தேகம் தீரவே இல்லை.
ஆனாலும் எது எப்படியோ மிகச்சிறுதொகை சிங்களவரே வாழ்ந்த அந்தக் கிராமத்துக்கு நேரடிப் பாதிப்பு எதுவும் வரேல்லை
.
அந்த ஊரிலைதான் பதினைஞ்சு வயசுப் பெடியன் அஞ்சு வயசுப் பையனைச் சின்னவாப்பா என்று கூப்பிடுவதையும், பத்துவயதுப்பிள்ளை தன்ரை மடியிலை வைத்துத் தாலாட்டும் கைக்குழந்தையை மாமா என்று சர்வ சாதாரணமா சொல்லுவதையும் முதற் தடவையாப் பாத்தன். அவங்க கலாச்சாரத்திலை சாதாரணமாக இருந்த இந்த உறவுமுறையள் எனக்குப் பெரும்புதினமா இருந்தது.
ஒருமாதிரியா நிலைமை கொஞ்சம் சீரடையக் கொழும்பு வந்து சேர்ந்தன். 
ஆனாலும் பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படாததாலை எங்களுக்கெல்லாம் வலு சந்தோசம் கிரிக்கெற் அடி, புட்போலென ஒரே கொண்டாட்டந்தான். என்ன ஒரு வித்தியாசமெண்டால் எங்கட குடியிருப்பு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அண்மையிலை இருந்ததால் இரணுவ ரோந்து சுற்றல் அதிகமாகக் காணப்படும். ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வளாகத்தைச் சுற்றி முள்ளுக் கம்பி தடையள் நிறையப் போட்டிருந்தினம். அப்பத்தான் முதல் முதல்லை சப்பை மூஞ்சி ஆமிக்காரர் சிலபேரைக் கண்டனான் என்று நினைக்கிறன். அவை உதவிக்கு வந்திருக்கிற இந்தியன் ஆமியாம் என்று சில சனம் சந்தோசப்படும்.
ஒருசில தடவை இராணுவ உலங்குவானூர்திள் எங்கட மைதானத்திலையும் வந்து இறங்கினது. காற்றைச் சுழற்றியடித்திலை புளுதி கிளம்ப, தலைமுடி காத்திலை பறக்கக் கிட்டத்திலை போய்நின்று வேடிக்கை பார்ப்பம். பிறகு புளுகமாக அதைப் பலருக்கும் சொல்லிக்கொண்டம்.
அந்தக்காலத்திலை நாங்கள் பெடியளெல்லாம் சிங்களம் தமிழென்று பாக்காமல் நல்லாப் பழகுவம் அடிபிடிப்படுவம், துவேசமெண்டது அவ்வளவு பெரிசாத் தலையெடுக்காத காலம். நாங்கள் அந்தமாதிரிச் சிங்களத்திலை வெளுத்துவாங்குவம். அவங்களும் தட்டுத்தடுமாறிக் கொஞ்சங் கொஞ்சங் தமில் தெறியும் என்று தமாசாப் பேசுவாங்கள். ஆனால் தமிழிலை உள்ள எல்லாக் கெட்டவார்த்ததையளும் மட்டும் தப்பாமல் பேசுவாங்கள்.
அப்ப சமியந்தா என்றொரு சிங்களப்பிள்ளையும் எங்கட குடியிருப்பிலை இருந்தவள். அவளின்ரை நடை உடை பாவனையெல்லாம் கை தேர்ந்ததொரு நாட்டியக்காரியின்ரை அபிநயம் போல இருக்கும். அவளோட கதைக்க வேணும் எண்டதுக்காகவே மைதானத்திலை நாங்கள் அடிக்கிற பந்துகள் அடிக்கடி அவளவை நிண்டபக்கமாப் போகும். இந்தச் சமியந்தாப் பிரச்சனையாலையும் பசங்க நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் கோவிச்சுக்கொண்டு அப்பப்ப கதையாமலுக்குக்கூட இருந்தனாங்கள். கடைசியிலை என்னடா என்றால் அந்தப்பிள்ளை கீரைத்தோட்டத்துப் பெடியனோட ராசியாகிவிட்டது தெரிஞ்சு நாங்களெல்லாம் கொஞ்சநாள் துக்க தினமும் கொண்டாடினம்.
இந்த இடத்திலை இன்னுமொண்டையும் சொல்ல வேணும் பெடியள் செற்றுகளுக்கை அடிக்கடி அடிதடியளும் வந்திடும் அப்ப கூட நிண்ட எங்கட ஆக்களிலை கனபேர் நைசாக் கழண்டிடுவினம். அவங்கள் சிங்களப் பெடிப்பிள்ளையள்தான் கடைசிமட்டும் நிண்டு எங்களுக்காக அடிபடுவாங்க
ள், அப்பிடி நட்பெண்டால் நட்பாய் இருந்த ஒருசில சிங்களப் பெடியளை இண்டைக்கும் மறக்கேலாது. பெர்னாண்டோ எனக்காக எத்தனை பேரோட அடிபட்டிருப்பான். பிறகு தமிழரும் சிங்களவரும் இரு துருவங்களாகி கால ஓட்டத்திலை நான் ஊர் துறந்து. அவன் இராணுவத்திலை சேர்ந்து உயர் அதிகாரியாகி நெடுநாளாகியும் தெருவில் எனது சகோதரங்களை அல்லது பெற்றோரைக் கண்டால் தன்ரை ஜீப்பை விட்டு இறங்கிச் சென்று என்ரை சுகம் விசாரிக்கும் அளவுக்கு இன்றும் அவன் நட்பைப் பேணிவருவதை மறைக்கவும் மறக்கவும் இயலாது.
எங்கட குடியிருப்பிலை இருந்தவையளிலை கருணாரட்ண என்று ஒருத்தர் கொஞ்சம் கரகரப்பா அடித் தொண்டையாலை பேசுவார் தலையிலை ஒருமுடியைக்கூட நான் கண்டதில்லை. இவரைமட்டும் தமிழ்ப்பெடியள் ஒருத்தருக்கும் அவ்வளவாப் பிடிக்காது. செல்லமா மொட்டை அங்கிள் என்று சொல்லிக் கொள்ளுவம். அவரும் தன்ரை பிள்ளையளை அவ்வளவா எங்களோட சேர விடமாட்டார்.
இந்தச் சேகுவரா சதி முறியடிப்பை ஒட்டிய காலத்திலை அவர் வலிய வலிய வந்து எங்களோடையெல்லம் நல்லாப் பகிடிவிட்டுக் கதைப்பார். தன்ரை பெடியளையும் சேர்ந்து விளையாட விடுவார். அவற்றை பெடியன் ஜெயந்தவும் புட்போலடியிலை வலுவிண்ணன். எங்கடை குழுவிலை அவனும் விளையாட வந்ததிலை எங்களுக்கு வலுபுளுகம்.
அப்ப எனக்கு விளங்கேல்லை மொட்டை அங்கிளுக்குத் திடீரெண்டு ஞானோதயம் வந்த காரணம். கனகாலத்துக்குப் பிறகு யோசிக்கேக்கைதான் விளங்கிச்சுது அந்தக் காலகட்டத்திலை மகனை எங்களோட திரிய விட்டது அவற்றை பெடியுக்குப் பாதுகாப்பு என்ற விசயம். அந்தக்காலத்திலை கனசிங்களப் பெடியள் பாதுகாப்புக்கு நெத்தி நிறைய விபூதி சந்தனம் அப்பிக்கொண்டு திரிஞ்சவை என்றும் கேள்வி.
                                                          
ஒரு சில தசாப்தத்துக்கை காலம் செய்த கோலத்தைப் பாருங்கோ. அவையின்ரை பெடியளை ஆமியிட்டையிருந்து காப்பாற்ற வேணுமெண்டது மாறி நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமே.

22 comments:

நிரூபன் said...

சமந்தாவின் நினைவுகளை மீட்டிப் பார்த்துக் காலம் செய்த கோலத்தினால் இருவேறு துருவங்களான இனங்களின் முற்கால ஒற்றுமையினை, ஞாபகப் பகிர்வாக உதிர்த்திருக்கிறீங்க ஐயா...

நிரூபன் said...

எங்கட காலத்தில இப்படியான சம்பவங்கள், புட்டும் தேங்காய்ப்பூவும் போன்ற ஒற்றுமை இல்லையே என்பதனை நினைக்க கவலையாக இருக்கு.

Yaathoramani.blogspot.com said...

பொற்காலமாக இருந்த அந்த நாட்களை
எண்ணி அசை போடுகையில் ஒரு
ஏக்கப் பெருமூச்சைத்தான் வெளியிட முடிகிறது
அது தங்கள் படைப்பில் தெளிவாக
உணர முடிகிறது
மன்ம் கனக்கச் செய்யும் தரமான பதிவு

அம்பலத்தார் said...

புட்டும் தேங்காய்பூவும் ரசனைமிக்க இதுபோன்ற நித்தியவாழ்வுடன் இணைந்த உவமானங்களை சட்டென்று கூறுவதில் நீங்கள் கில்லாடிதான் நிரூபன்.
புட்டும் தேங்காய்பூவுமாக வாழ்ந்தகாலம் மாறி அந்தநாள் காதலியான இன்றைய என் மனைவியையும் மறந்து இளமைக்கால வேகத்தில் முழுநேரப்போராளியாகி பல ஆண்டுகள் வாழ்ந்து..... என எனது வாழ்வின் மற்றைய பக்கங்களும் உள்ளன. அவற்றைப் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பதிவு செய்கிறேன்

அம்பலத்தார் said...

ஆமாம் ரமணி அது ஒரு பொற்காலம்தான். என்னசெய்வது ஏக்கப் பெருமூச்சுமட்டுந்தான் இன்று மீந்திருக்கிறது

மாய உலகம் said...

பெடியனோட ராசியாகிவிட்டது தெரிஞ்சு நாங்களெல்லாம் கொஞ்சநாள் துக்க தினமும் கொண்டாடினம்.//

சோகத்தின் நடுவே...இது போன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் தான் சுகமாக இருந்திருக்கின்றன...

மாய உலகம் said...

அவங்கள் சிங்களப் பெடிப்பிள்ளையள்தான் கடைசிமட்டும் நிண்டு எங்களுக்காக அடிபடுவாங்கள், //

எப்படி இருந்த அவங்க...இன்று எப்படியெல்லாம் தடமாறிட்டாங்க...வேதனை தான்...என்ன செய்ய..உங்களோடு சேர்ந்து நானும் பெருமூச்சு விட வேண்டியதான்...வருந்துகிறேன்...அந்த கால நினைவுகள் இப்போ கிடைக்காததை எண்ணி வருந்துகிறேன்

சென்னை பித்தன் said...

இது போன்ற நினைவுகளில் தோய்ந்து நிகழ்வின் கனத்தைக் கொஞ்சம் மறக்க வேண்டியதுதான்!

இராஜராஜேஸ்வரி said...

அந்தக்காலத்திலை கனசிங்களப் பெடியள் பாதுகாப்புக்கு நெத்தி நிறைய விபூதி சந்தனம் அப்பிக்கொண்டு திரிஞ்சவை என்றும் கேள்வி. /

காலம் செய்த கோலம் கனக்க வைக்கிறது,

Unknown said...

ஆரம்பம் அட்டகாசமாய் தொடங்கி முடிவு கனக்குது..

அம்பலத்தார் said...

ரசித்துப் படித்து விமர்சித்ததற்கு நன்றிகள் மாயா..

அம்பலத்தார் said...

ஐயா சென்னைப்பித்தன், நீங்கள் கூறுவதுபோல பகிர்ந்துகொள்வதன்மூலம் மனதை ஆற்றிக்கொள்ளவேண்டியதுதான்

தனிமரம் said...

அட்டகாசமான பழைய நினைவுகளை மீட்டிவிட்டீர்கள் நானும் சிலகாலம் கலகெதரவில் பணியாற்றினேன் என்பதால் அந்த ஊரும் பிடிக்கும் சகோதரமொழி நண்பர்கள் நல்லவர்களும் உண்டு என்பதை சுட்டி நிற்கும் மனதில் நச் என்று எழுதியுள்ளீர்கள்

அம்பலத்தார் said...

கருத்துப் பகிர்விற்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

ரெவெரி said...

உங்கள் வாழ்வின் மற்ற பக்கங்களையும் இதைப்போல் பகிர்வீர்கள் என்று நம்புகிறோம்...காதலித்தவரையே மணந்தது அறிந்து மகிழ்ந்தேன்...பழைய நினைவுகளை பகிர்ந்ததுக்கு நன்றி...

ரெவெரி

சி.பி.செந்தில்குமார் said...

அனுபவப்பகிர்வு

அம்பலத்தார் said...

ஒவ்வொருவர் வாழ்வின்பின்னாலும் எத்தனையோ நெஞ்சைக் கனக்கச் செய்யும் விடயங்கள் உண்டு சிவா

அம்பலத்தார் said...

நேசன், உங்கள் மனதிலும் ஒரு இனிய உணர்வை பதிவு உண்டுபண்ணியது மகிழ்வுதருகிறது. மானிடரில் 100% நல்லவனும் இல்லை. 100% கெட்டவனும் கிடையாதுதானே

அம்பலத்தார் said...

சந்தர்ப்பம் வரும்போது ஏனைய விடயங்களையும் பகிர்ந்துகொள்கிறேன் ரெவெரி

குறையொன்றுமில்லை. said...

புட்டும்தேங்காய்ப்பூவும் அருமையான ரசனையான
நினைவுகள். அந்தக்காலங்கள் பொற்காலமாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

அம்பலத்தார் said...

கருத்துப் பகிர்விற்கு நன்றி செந்தில்குமார்

அம்பலத்தார் said...

அது ஒரு கனவாகிப்போனது லட்சுமி