நான் நானாகவே உணருமிடம் அம்பலத்தார்பக்கம்

வணக்கம்! இந்த வலைப்பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. சமரசங்கள் எதுவுமின்றி நான் நானாகவே உணருமிடம் இது.
நான் எனது ஆக்கங்களையும், அனுபவங்களயும், ஏக்கங்களையும் ஆதங்கங்களையும், புலம்பல்களையும் உங்கள்முன் கொட்டித்தீர்க்கிறேன். ஆக்கபூர்வமான கருத்துகள் மற்றும் விவாதங்களுக்கு பதிவிற்கு கிழே உள்ள comments பகுதியை பயன்படுத்துங்கள். பிடிச்சிருந்தால் தட்டிக்கொடுத்து உற்சாகம்தாருங்கோ. பிடிக்காவிட்டாலும் சும்மாபோகாமல் பக்குவமா நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போங்கோ. மீண்டும் சந்திப்போம்

Tuesday

ஒட்டகம் புகுந்த வீடு 1

இக்கதையில் வரும் கதாபாத்திரங்களும் அவர்தம் குணாம்சங்கள் கொண்டமாந்தரும்,
கருப்பொருட்களும் என்னகத்தும் என்னைச் சுற்றிலும்மட்டுமன்றி
உங்கள் ஒவ்வொருவரது எதிர்வீட்டிலும் பக்கத்து வீட்டிலும் இருக்கும்......
ஏன் உங்கள் வீடுகளிலும் காணப்படக்கூடிய சாதாரணமானவர்களாகவும;,
சந்திக்கும் சங்கதிகள் யாவும் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விடயங்களாகவுமே இருப்பதனால்!
இது என்ரை கதை மட்டுமல்ல ஒவ்வொரு மானிடரதும் கதையே!
இது  ஜேர்மனியிலிருந்து வெளிவரும் தமிழ்நாதம் சஞ்சிகைக்காக சிலகாலங்களிற்குமுன் எழுதிய தொடர் படித்துப்பாருங்களேன் ...............





ஒட்டகம் புகுந்த வீடு


கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்.........................
யாரது காலமை ஒன்பது மணிக்கு அருமையான என்ரை தூக்கத்தைக் கெடுக்கிறது என்ற யோசனையோட
மெதுவா எழும்பிப்போய் வாசல்கதவைத் திறந்தன்.
வணக்கம் அண்ணா!
நம்பமுடியாமலுக்கு.....
கண்ணைக் கசக்கிக்கொண்டு வடிவா உற்றுப்பார்த்தன்,
நேரா மேலை கீழை அந்தப்பக்கம் இந்தப்பக்கம்
நம்பவே முடியவில்லை.
வணக்கம் அண்ணே! என்ன அப்படிப் பார்க்கிறியள். அருமையான காலைத் தூக்கத்தைக் கெடுத்துப்போட்டன்போல?
இன்னும் என்னாலை நம்பவேமுடியவில்லை.
சுண்டி இழுக்கிற நிறமும் தொலைக்கட்சி விளம்பரங்களிலை வாற பொம்பிளையள்போல ஒல்லியும் உயரமுமா
கண்ணுக்கு முன்னாலை ஒரு ஒட்டகம் ஒட்டகமேதான்.
என்ன அப்படிப் பார்கிறியள் நான் ஒட்டகத்தார் உங்கட எதிர்வீட்ற்குப் புதிதாக் குடிவந்திருக்கிறன்.
சுதாகரித்துக்கொண்டு வணக்கம், சந்தோசம்
புதிதாக்குடிவருவதும் அதுவுமா ஒரு பொங்கல் பொங்குவமென்றால் அரிசி கொண்டுவர மறந்துபோனன். அதுதான் உங்கிளிடம் இருக்குமென்றால் கொஞ்சம் கைமாத்தா தர இயலுமே?
இதென்ன கேள்வி புதிதாக் குடிவந்திருக்கிறியள் குடிபுகுதலும் அதுவுமா கொஞ்சம் நில்லுங்கோ வாறன் என்று சொல்லிக்கொணடு;
குசினிக்குப்போய் ஒரு பாத்திரம் நிறைய அரிசியை அள்ளிக்கொணந்து கொடுத்தன்.
சட்டென்று குனிந்து பாத்திரத்தை வாங்கின ஒட்டகம் நன்றியென்று சொல்லிக்கொண்டு கிறுகிறுவெனத் தன்ரை வீட்டிற்குள் புகுந்து மறைந்தது.
அப்பாடா! என்று ஆசுவாசமாக சோபாவில சாய்ந்து ஒரு ஐந்து நிமிசமிருக்காது திரும்பவும்
கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்ங்.........................
திரும்ப யாராக்கும் என்று யோசித்தவாறு கதவைத் திறக்க
உங்களிடம் பால் இருக்கே? அதையும் மறந்போனன். பொங்கலுக்கு....
குசினியில இருந்து ஒரு பக்கற் பாலை கொணந்து கொடுத்தன்.
வாங்கினகையோட அட உது லிடில் பக்கற்போலகிடக்கு இனி அந்தக் கடையில வாங்காதையும் வேற நல்ல கடையள் இருக்குது
பிறகு சொல்லுறன் என்றவாறு விறுவிறெண்டு வீட்டிற்கை புகுந்து கதவைச் சாத்தினார்.
இனியென்ன எழும்பியாச்சு பல்துலக்கி முகம் கழுவுவம் என்று குளியல்அறைக்குள்ள போய் அலுவலை முடிக்கேல்லை அதற்குள்.....
கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்ங்......................... 
திரும்ப அழைப்புமணி
வாயில திணிச்ச பிரசோடபோய் கதவைத் திறந்தால்!
பொங்கலுக்குச் சக்கரையுமெல்லோ மறந்துபோனன்.
வாய் நிறைஞ்ச நுரையோட கதைக்கமுடியாமலுக்கு குசினிப்பக்கம் கையைக் கட்டினன்.
தன்ரை வீடுபோலக் கொஞ்சமும் கூச்மில்லாமல் குசினியில புகுந்து அலுமாரியைத் திறந்து
சக்கரையென்று எழுதி ஒட்டியிருந்த டப்பாவை டக்கெண்டு எடுத்துக்கொண்டு ஒழுங்கான ஆள்போலக்கிடக்கு ஒவ்வொரு டப்பாவிலையும் எழுதி ஒட்டி வடிவாச் சுத்தமா அடுக்கி வைத்திருக்கிறீர். டப்பாவோட கொண்டுபோறன் மிச்சத்தைப் பிறகு கொணந்துதாறன்.
பதிலுக்குக் காத்திராமல் சட்டென்று மறைந்தார்.
என்ன மிருகமோ இப்படி வெட்கமில்லாமலுக்கு என்று யோசித்துக்கொண்டு முகங்கழுவிக்கொண்டு
குசினியிற்கைபோய் கோப்பியைப்போட்டு கப்பில ஊத்த.......
மிண்டும் கிணிங்ங்ங்............ கிணிங்ங்ங்ங்ங்ங்......................... மணி ஒலித்தது.
சலிப்போடபோய் கதவைத் திறந்தால்
பெரியதொரு அண்டாவைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு ஒட்டகத்தார்.
என்ன? என்றன் ஏளனமா
அதொன்றும் பெரிய பிரச்சனையில்லை. என்ரை அடுப்பிற்கு இன்னும் கரண்ட் கனக்சன் கொடுக்கேல்லை அதுதான் பொங்கலை இங்கையே பொங்குவம் என்று வந்தனான் என்று சொல்லிக்கொண்டு.......... பதில் சொல்லமுன்னமே கிறுகிறெண்டு குசினியிக்கைபோய் பானையை அடுப்பில வச்சார்.
கோப்பி வாசனை வருமாப்போலகிடக்கு என்று சுற்றும்முற்றும் பார்த்தவர் மேசையிலகிடந்த கோப்பியைக் கண்டதும்
காலையிலை இருந்து ஓடியோடி வேலை செய்து களைச்சுப்போனன் என்று சொல்லிக்கொண்டு கேட்டுக் கேள்வியில்லாமலுக்கு
கப்பிலை ஊத்தி இரண்டு உறிஞ்சு உறிஞ்சிப்போட்டு
உம் சுமாராத்தான் இருக்கு.
பாலை நல்லா வத்தக் காய்ச்சி இரண்டு கரண்டி நெஸ்கபேயும் ஒரு கரண்டி சீனியும்போட்டு, நுரைவாறமாதிரி நல்லா இழுத்து ஆத்திப்போட்டுக் குடிச்சுப்பாரும் ருசி தெரியும்.
நான் திரும்பவும் எனக்கொருகப் கோப்பிபோட்டுக் குடிச்சிட்டு
ஒட்டகத்தாருக்கு ஒத்தாசையா முந்திரி, திராட்சை, ஏலக்காய் என்று சகலதும் எடுத்துக்கோடுக்க
ஒருவழியாப் பொங்கிமுடிச்ச ஒட்டகத்தார்
நேரம் வலுகெதியாப்போட்டுது விருந்தினர் வரப்போகினம் இன்னுமொருநாள் ஆறுதலாகக் கதைப்பம் என்றவாறு
பானையையும் தூக்கமாட்டடாமல் தூக்கிக்கொண்டு தன்ரை வீட்டை நோக்கி மெதுவாக நடந்தார்.

ஒட்டகம் மீண்டும் வரும்..............

8 comments:

ஹேமா said...

நல்ல பகிடிப் பொங்கல்தான்.நடத்துங்கோ !

Anonymous said...

இரவெல் சீலையில் கொய்யகம் விட்ட கதை தான் போங்கோ இந்த ஒட்டகம் பொதி சுமக்காமலே காலத்தை ஓட்டத்தெரிந்தது ஒருவேளை பாலைவனத்தில பட்டினி கிடந்ததினால வந்த அனுபவமோ ?

பராசக்தி said...

எங்கட ஆக்கள் ஒசி என்றால் பேதிமருந்தும் குடிப்பினம் கண்டியளோ! ஒட்டகத்தை தொடர்ந்து வேறு பல மிருகங்களும் வர சந்தர்ப்பம் கொடுக்காமல் இப்பவே உஷாராயிருங்கோ அம்பலத்தார்.
ஒரு கரண்டி பொங்கலைத்தன்னும் தராமல் போன ஓட்டகத்தாரை என்ன செய்தால் மனசுஆறும்?

அம்பலத்தார் said...

தைப்பொங்கல் மாட்டுப்பொங்கல் கேள்விப்பட்டிருக்கிறன் ஹேமா சொல்லுற பகிடிப்பொங்கலை இன்றுதான் கேள்விப்படுகிறன்

அம்பலத்தார் said...

Anonymous said...
//இரவெல் சீலையில் கொய்யகம் விட்ட கதை தான் போங்கோ//
வணக்கம் பெயரிலி, உது எந்த ஊர் பழமொழியுங்கோ

அம்பலத்தார் said...

பராசக்தி said...
//....ஒட்டகத்தை தொடர்ந்து வேறு பல மிருகங்களும் வர சந்தர்ப்பம் கொடுக்காமல் இப்பவே உஷாராயிருங்கோ அம்பலத்தார்.//
எச்சரிக்கை தந்ததற்கு நன்றி பராசக்தி

Unknown said...

:-)

ம.தி.சுதா said...

ஹ...ஹ... ஒட்ட அகம் தேயும் வரை கட்டாயம் வரும் ஐயா...